Monday, April 4, 2011

சுனாமியே இனிவராதே - கவிமாமணி அறந்தைத்திருமாறன்




ஆக்குவதும் காப்பதுவும் அழிப்ப தெல்லாம்
               ஆண்டவனின் செயலென்று அன்றே சொன்னார் !
ஆக்குவது அவன்செயல்தான்; நம்மால் இல்லை
              ஆக்கியநல் உயிர்,பொருளை யார்காக் கின்றார் !
ஆக்கமுடன் உயிரினங்கள் உழைத்து ழைத்து
             அரும்பாடாய் உயிர்,பொருள்கள் காக்கக் கண்டோம்
நீக்கமற இறையவனே காப்பா னென்றால்
            நிறை,குறைகள் நிந்தனைஏன்? தீர்ப்பு உண்டா?

ஒருவன்மற் றொருவனுயிர் போக்கி விட்டால்
            ஊருலகம் கொலைகாரன் என்றே சொல்லும் !
ஒருகொலைக்கே சிறையுண்டு; தூக்கு உண் டு !
            ஓருயிரா? ஜப்பானில் சென்டாய் மினாமி
பெருநகரே அழிந்துபட சுனாமி தந்த
           பெருந்துயரம்; இருபதினா யிரவர் மாண்டார்!
விரும்பித்தான் இறைவன்கொலை செய்கின் றானா?
            விடையிலையா? பொறுப்பாளி இதற்கில் லையா?

வீடுமுதல் கார்கப்பல் ரயில்வி மானம்
           விரிவாக்க அணுவுலைகள் பெட்ரோல் டீசல்
தேடறிய விஞ்ஞான சாத னங்கள்
           திகைப்பூட்டும் தொழில்நுட்பம்; அனைத்தும் வீழ்த்தி
நாடழித்துப் போட்டசெயல் நன்றோ; தெய்வம்
           நன்மைசெயத் தானுண்டு; இதுவோ கொடுமை
வாடிடுதே மக்கள்மனம் உலக மெங்கும்!
           வடிக்கிறதே கண்ணீர்;இறை அறிந்தா லென்ன ?

போர்வெறிகொண் டமெரிக்கா ஜப்பான் நாட்டில்
           போட்டஅணு குண்டாலே மூன்று லட்சம்
பேர்மாண்டார்; ஹிரோஷிமா நாகசாஹி
            பெருந்துயரைக் கண்டது;பின் மீள லாச்சு!
வேரறுத்த அமெரிக்கா குனிய லாச்சு!
            வீழ்ந்துபட்ட ஜப்பானோ நிமிர லாச்சு!
சீரழித்தாய் சுனாமியே ஜப்பான் மீளும் !
           சீருபெறும்; பேருபெறும்; உலகம் காணும் !

போனவுயிர் மீண்டிடுமா? பால்கு டித்த
          பிஞ்சுமுதல் வயோதிகரை அழிக்க லாமா?
நாணமிலாச் செயலன்றோ; தெய்வத் திற்கோ
          நற்கருணை சிறிதில்லை; உலகே தூற்றும்
ஈனசெயல்; சுனாமியே தாக்க லாமா?
         எங்கள்தமிழ் நாட்டோடு இலங்கை சேர்த்து
போனமுறை நீயழித்தாய்; ஜப்பான் இன்று
         புதைகுழியாய் மாறியதே இனிவா ராதே !

சாகாமல் வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை !
         சாவுக்கும் விதிமுறைகள் வகுத்தாய் நீயே
சாவுக்கு அஞ்சியஞ்சும் காலம் போச்சு !
        சாவுண்டு; இதையறிந்தே வாழு கின்‌றோம் !
தீவுமுழு தாய்அழித்தாய்; ஜப்பான் நாட்டார்
        தீமையவர் செய்ததென்ன? கொடுமை யன்றோ
சாதிக்கப் பிறந்தவர்கள்; ஜப்பான் நாட்டை
        சாவுலகு அனுப்பிடினும் மீண்டும் வெல்வார்!

11-MARCH-2011

Wednesday, June 30, 2010

கவிபாடும் கலைக்கூடம்

கவிபாடும் கலைக்கூடம்

தமிழ்மாமணி கவிஞர் அறந்தைத் திருமாறன்
20-01-1974


கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றhச் சிறப்போடு விளங்குகிறது.

ஆவுடையார் கோவில்

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

தேரின் சிறப்பு

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றhகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் காளையார்கோவில் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்

இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

வடக்கயிறு

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களுக்கு அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

திபேத்தும் திருப்பெருந்துறையும்.
ஆவுடையார்கோயிலுக்கு இன்னொரு பெயர் திருப்பெருந்துறை ஆகும். மாணிக்கவாசகரால் அப்பெயரால் அழைக்கப்பட்ட திருத்தலம் இதுவேயாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

இமயமலையில் உச்சிக்கு அப்பால் அடிவாரமாக அமைந்தள்ள திபேத்தில் ஓங்கி வளர்ந்த மரங்களே இல்லை. அப்படி இருக்கின்ற மரங்களோ குறு மரங்களாக இரண்டரையடி உயரத்திற்கு மேல் வளருவதில்லை. இப்படி மரங்களே இல்லாத திபேத்தில் உள்ள புத்தர் ஆலயத்தை பெரிய பெரிய மரங்களைக் கொண்டு கட்டியிருக்கிறhர்கள். அங்கே அது பெரும் வியப்பிற்கு உரியதாக விளங்குகிறது. இந்திய எல்லையில் இமயமலைச் சரிவில் அல்மோரா - காலபானி போன்ற பகுதிகளில் தான் பெரிய மரங்கள் உள்ளன. இங்கிருந்து கால் நடையாக இந்த இமயமலையைக் கடக்க ஒற்றையடிப் பாதை கூட சரியாக இல்லாத மலைப்பகுதியை பனிப்பாறைகளைக் கடந்து எப்படித்தான் இந்த மரங்களைக் கொண்டு வந்து புத்தர் ஆலயம் அமைத்தார்கள் என்பது விளங்காப் புதிராகும்.

அதே போல இந்த திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் வியக்கத்தக்க ஒன்றhகும். மலைகள் குன்றுகளே இல்லாத இந்தப் பகுதியில் வெறும் கற்களினாலே கோயில் அமைந்திருப்பதை நினைத்துப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது.


சிலை செய்ய வேண்டுமானால் அதற்கென்று தகுந்த நன்றhக தேற விளைந்த கற்களை சிற்பிகள் தேர்ந்தெடுப்பார்கள். கண்ட கண்ட பாறைகள் எல்லாம் சிலை செய்ய ஏற்றதல்ல என்று சிற்ப சாஸ்திரம் படித்த கலைவல்லார்கள் கூறுகிறhர்கள். அப்படி சிலை செய்ய ஏற்ற பாறைகள் 100 மைல் சுற்று வட்டாரத்தில் இல்லை என்று தொழில் நுட்ப அறிஞர்கள் கூறுகிறhர்கள். சுமார் 50 மைல்களுக்கு அப்பாலுள்ள திருமயம் திருக்கோகர்ணம் நார்த்தாமலை சித்தன்னவாசல் விராலிமலை போன்ற பகுதிகளில் உள்ள குன்றுகளில் விளைந்த பாறைகள் சிலை செய்யத் தகுதியற்றன என்றும் அதை ஜல்லிக் கற்களாக்கி பாதைக்குப் பரப்ப மட்டுமே ஏற்றது என்றும் சிற்பிகள் கூறுகிறhர்கள்.

ஆனால் சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்றால் இந்தக் கோயிலில் அடங்காத்தனத்திற்கு அளவே இல்லையல்லவா

பூதம் கட்டிய கோயிலா

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டாரப் பாமரமக்கள் இன்றும் பகர்வதுண்டு. அந்த அளவிற்கு மனிதர்களால் ஏதும் செய்ய முடிந்திராத பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கை

ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனங்கை தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம்.

இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்.

தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

இதனை உற்று நோக்கிப் பார்த்தால் இந்தக் கோயிலின் கலையின் வெல்லுந்திறன் படைத்த வேலைப்பாடமைந்த கலைக்கோயில் வேறில்லை என்று கூறி இக்கோயிலின் அடங்காத் தனத்தை நேரடியாக ஒப்புக் கொள்ளலாம்.

துப்பாக்கிக் குண்டு துளைத்த கொடுங்கை

இந்த ஆவுடையார்கோயிலை பார்வையிட வருகை தந்திருந்த அந்தக் காலத்திய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் இந்தக் கொடுங்கூரையை சுட்டுப் பார்த்து இருக்கிறhர். அவரது கைத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவுடன் இந்த கொடுங்கைக் கூரை சுக்கு நூறாக சிதறி விழுந்துவிடவில்லை. வெடித்துச் சீறல் ஏற்படவில்லை. குண்டு பாய்ந்த இடம் எதுவோ அந்த இடத்தில் மட்டும் துப்பாக்கிக் குண்டின் அளவிற்கு மட்டுமே துளைத்துக் கொண்டு போய் இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தக் கூரை மென்மையும் தின்மையும் வாய்ந்ததாக அமைந்துள்ளதை இன்றளவும் சங்கீத மண்டபம் எனப்படும் தியாகராஜ மண்டபத்தில் காண முடியும்.

இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.

உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

இப்படி எத்தனை எத்தனையோ அற்புதங்கள். இதில் எதை எழுதுவது எதை விடுவது

படைகல்

இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறhர்கள்.

பச்சை அரிசி இல்லை - புழுங்கல் அரிசி தான்

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.

அணையா நெருப்பு
6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை என்றால் இதன் மகோன்னதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
ஆவியாகி தோற்றமற்று அருவமாக இங்கிருக்கும் ஆத்மநாதரை வழிபடும் பக்தர்களின் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்கிற வாழ்த்தொலியும் கொப்போசையும் குழலோசையும் பாவார்கள் ஓதுவார்களின் பக்தி இசைப் பிரவாகமும் கேட்கும்தோறும் இதமான பேரின்ப உணர்வை ஒவ்வொரு பக்தரும் பெற முடியும்.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.

இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் அவ்வப்போது கட்டப்பட்டு ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக ஆக்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

பொன்னோடு - செப்போடு

தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பது நமக்குத் தெரியும். தேக்கு மரங்கள் நு}ற்றhண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்ததாகும். ஆனால் இந்த தேவதாரு மரமோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரம் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றhத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவரைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

தந்தை பெரியார்

சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை இன்றைய மக்களுக்கு எடுத்துக் கூறி வந்த தென்னாட்டு சாக்ரடீஸ் எனப்படும் திராவிடக் கழகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மநாதர் ஆலயத்தைப் பார்வையிட்டு இதன் தத்துவத்தைப் பற்றி மிக மேன்மையாக விளக்கிப் பேசிச் சென்றிருக்கிறார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற மாமூலர் கருத்தையும் நட்டகல்லும் பேசுமோ நாதன் தன் உள்ளிருக்கையில் என்று கூறிய சிவவாக்கியர் கருத்தையும் மக்களிடத்திலே எடுத்துக் கூறி வந்த சமுதாயச் சிற்பி பெரியார் அவர்கள் இந்த ஆவுடையார் கோயிலின் சிற்பங்களிலுள்ள கலை நுனுக்கத்தின் வடிவங்களைக் கண்டு வியந்து சென்றிருக்கிறார்கள்.

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

நரம்பு துடிக்கும் சிலைகள்

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

பஞ்ச கல்யாணிக் குதிரை

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.
குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி
இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடிகளான திருவாசகம் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து குதிரை வாங்க

இந்த ஆலயத்தைக் கட்டிய மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து குதிரை வாங்க இங்கு வந்திருந்தார் என்பதும் அந்தக் காலத்திலே அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் மார்க்கமாக கொண்டு வந்து தமிழகத்தின் பல பாகங்களிலிருந்த மன்னர்களிடம் விற்றhர்கள் என்பதும் ஆவுடையார் கோயிலுக்குக் கிழக்கே 15 மைல் தொலைவில் தற்போதுள்ள வங்கக் கடல் அந்தக் காலத்தில் இந்த ஆவுடையார்கோயிலுக்கு அருகில் 2 மைல் தொலைவில் இருந்தது என்பதும் மாணிக்க வாசகர் வரலாற்று ஆராய்ச்சிப்படியும் ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார மண்வள ஆராய்ச்சிப்படியும் கண்டறிவிக்கும்.

Saturday, April 28, 2007

கன்னி முயற்சி

வெகுஜன ஊடகங்களில் வெகுகாலம் எழுதியிருந்தாலும், இணையத்தில் எழுதுவது இதுவே முதல் முறை.

விரைவில் சந்திக்கலாம்.