Monday, April 4, 2011

சுனாமியே இனிவராதே - கவிமாமணி அறந்தைத்திருமாறன்




ஆக்குவதும் காப்பதுவும் அழிப்ப தெல்லாம்
               ஆண்டவனின் செயலென்று அன்றே சொன்னார் !
ஆக்குவது அவன்செயல்தான்; நம்மால் இல்லை
              ஆக்கியநல் உயிர்,பொருளை யார்காக் கின்றார் !
ஆக்கமுடன் உயிரினங்கள் உழைத்து ழைத்து
             அரும்பாடாய் உயிர்,பொருள்கள் காக்கக் கண்டோம்
நீக்கமற இறையவனே காப்பா னென்றால்
            நிறை,குறைகள் நிந்தனைஏன்? தீர்ப்பு உண்டா?

ஒருவன்மற் றொருவனுயிர் போக்கி விட்டால்
            ஊருலகம் கொலைகாரன் என்றே சொல்லும் !
ஒருகொலைக்கே சிறையுண்டு; தூக்கு உண் டு !
            ஓருயிரா? ஜப்பானில் சென்டாய் மினாமி
பெருநகரே அழிந்துபட சுனாமி தந்த
           பெருந்துயரம்; இருபதினா யிரவர் மாண்டார்!
விரும்பித்தான் இறைவன்கொலை செய்கின் றானா?
            விடையிலையா? பொறுப்பாளி இதற்கில் லையா?

வீடுமுதல் கார்கப்பல் ரயில்வி மானம்
           விரிவாக்க அணுவுலைகள் பெட்ரோல் டீசல்
தேடறிய விஞ்ஞான சாத னங்கள்
           திகைப்பூட்டும் தொழில்நுட்பம்; அனைத்தும் வீழ்த்தி
நாடழித்துப் போட்டசெயல் நன்றோ; தெய்வம்
           நன்மைசெயத் தானுண்டு; இதுவோ கொடுமை
வாடிடுதே மக்கள்மனம் உலக மெங்கும்!
           வடிக்கிறதே கண்ணீர்;இறை அறிந்தா லென்ன ?

போர்வெறிகொண் டமெரிக்கா ஜப்பான் நாட்டில்
           போட்டஅணு குண்டாலே மூன்று லட்சம்
பேர்மாண்டார்; ஹிரோஷிமா நாகசாஹி
            பெருந்துயரைக் கண்டது;பின் மீள லாச்சு!
வேரறுத்த அமெரிக்கா குனிய லாச்சு!
            வீழ்ந்துபட்ட ஜப்பானோ நிமிர லாச்சு!
சீரழித்தாய் சுனாமியே ஜப்பான் மீளும் !
           சீருபெறும்; பேருபெறும்; உலகம் காணும் !

போனவுயிர் மீண்டிடுமா? பால்கு டித்த
          பிஞ்சுமுதல் வயோதிகரை அழிக்க லாமா?
நாணமிலாச் செயலன்றோ; தெய்வத் திற்கோ
          நற்கருணை சிறிதில்லை; உலகே தூற்றும்
ஈனசெயல்; சுனாமியே தாக்க லாமா?
         எங்கள்தமிழ் நாட்டோடு இலங்கை சேர்த்து
போனமுறை நீயழித்தாய்; ஜப்பான் இன்று
         புதைகுழியாய் மாறியதே இனிவா ராதே !

சாகாமல் வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை !
         சாவுக்கும் விதிமுறைகள் வகுத்தாய் நீயே
சாவுக்கு அஞ்சியஞ்சும் காலம் போச்சு !
        சாவுண்டு; இதையறிந்தே வாழு கின்‌றோம் !
தீவுமுழு தாய்அழித்தாய்; ஜப்பான் நாட்டார்
        தீமையவர் செய்ததென்ன? கொடுமை யன்றோ
சாதிக்கப் பிறந்தவர்கள்; ஜப்பான் நாட்டை
        சாவுலகு அனுப்பிடினும் மீண்டும் வெல்வார்!

11-MARCH-2011